நுரை தின்றா பசி தீரும் ?
உரிமை இழந்து நிற்கையிலே - உங்கள்
உடன்படிக்கை ஒத்துவரு மென்றீர்
பதுங்குகுழியில் பதுங்கிய வேளையிலே - நாங்கள்
பகட்டுவீடு கட்டநிதி ஒதுக்கினீர்
உயிருறுப்பை அவர்கள் நறுக்கையிலே - இருவரையும்
உக்காந்து பேசிதீர்க்க சொன்னீர்
கற்பிழந்து எம்பெண்கள் கதறுகையிலே -சூறையாடிய
காமநாடிகளையே விசாரிக்கச் சொன்னீர்
பன்னாட்டு விசாரணை தேவையில்லை - இனவழிப்பிற்கு
உள்நாட்டு விசாரணையே உத்தமமென்றீர்
அட உலக பதருகளா ..
நுரை தின்றா பசி தீரும் ? ...உங்கள்
சொல் கேட்டா எம்நாடி யடங்கும் ?
வயிற்றுப்பசி தன்னை வைராக்கியத்தால் அடக்கிடுவோம்
உள்ளப்பசி தன்னை உயிர்நீங்கினும் அடக்கிலோம்
எங்கள் இதயத்தின் தாகம் .. தமிழீழத் தாயகம் !!
(மே 2013 கவிமாலையில் பரிசு பெற்றது)
Comments