தேடல்
பாரதியின் பாட்டுக்கு
பாஞ்சாலி பரதமாட
கம்பனைப் பிரதமராக்க
காமராசரும் கட்டளையிட
சீதையும் சிவகாமியும்
சீரியலில் மூழ்கிவிட
கண்ணகியும் மாதவியும்
கைகோர்த்து நடந்துவர
இளங்காளை அடக்கி
இளங்கோவும் மீசை முறுக்க
அவல் பிணைந்து எனக்கு
ஓளவையும் ஊட்டிவிட
குந்தவையின் கூந்தலுக்குள்
குதூகலம் நான் அடைந்திருக்க
நாக நந்தியின் தூண்டலில்
நந்தினி என்கால் அமுக்க
சொர்க்கம் இதுவென்று
சொக்கி நான் மயங்கிவிட
வலதுகையை பதம் பார்த்தது
வந்தியத்தேவன் எறிந்த ஈட்டி
அதிர்ந்து கண்விழித்து
அவசரமாய் எந்திரிக்க
அப்பொழுது புலப்பட்டது
அவையெல்லாம் கனவென்று
கனவு கலைந்தாலும்
தொடரும் என் தேடல்
ஈட்டியாய் குத்திச்சென்ற
ஈவிரக்கமற்ற கொசுவை நோக்கி
இது வாசகனின்
கொலைவெறித் தேடல்
( 2013 ஆகஸ்ட் மாத தங்கமீன் வாசகர் வட்டத்தில் பரிசு பெற்றது )
Comments