தூண்டுகோல்
சிரித்துச் சுமந்த பிஞ்சுகளை
அழுதே அள்ளுகிறது
புத்தகப்பை.
வரிசையில் நின்று
பாட்டாய் பாடியதற்கு
பரிசாய் கிடைத்தன
தோட்டாக்கள்.
கரும்பலகையில்
எழுதிப் பழகியவை
எதிர்பார்த்திருக்காது
கருஞ்சாத்தான்கள்
எழுதப்போவதை.
இடைவேளைக்காக
அடித்த மணிகளுக்குத்
தெரியவில்லை
ஒலித்தது
இறுதியாத்திரைக்கென்று.
சூடிக் கொள்ள
ஆயிரம் இருக்கின்றன
சுட்டுக் கொல்ல
என்ன இருக்கிறது
பூக்களிடம் ?
துண்டுதுண்டாய்
நறுக்க வேண்டும்
துப்பாக்கிகளையோ
தோட்டக்களையோ
அல்ல
தூண்டுகோல்களை !
01-01-2015 கவிமாலையில் இரண்டாம் பரிசு பெற்றது
Comments