சுவர்கள்
வட்டமுகம் கொண்டு
ஒட்டி உறவாடும்
சாணங்களோடு சல்லாபம்
பேசியதுண்டு.
சிறுவர் விளையாடும்
சிறுநீர் போட்டிகளை
சினங்கொண்டு
கடிந்ததுண்டு.
வாழ்த்துக்களாயிரம் சொல்லி
திருமணங்கள் நடத்துவதில்
சுவர்களுக்கும் பங்கு
இருந்ததுண்டு.
திரையிலும் மேடையிலும்
நடித்து வாழ்பவனுக்காக
அடிக்கடி பொய்களும்
சொல்லியதுண்டு.
கண்ணீர் அஞ்சலியைச்
சுமந்து கொண்டு
சுவர்கள் சோகமொழியும்
பேசியதுண்டு.
இப்பொழுதெல்லாம்
வண்ணங்களை
கழட்டி மாட்டி
வாய்பேச மறுக்கின்றன
கிராமத்துச் சுவர்கள்
நகரத்து மனிதர்கள் போல !
03/03/2015
Comments